இதை ஆங்கிலத்தில், 'Personalised Learning' என்று அழைக்கிறோம்.கடந்த இரு வருடங்களாக ஹெச்டிஎப்சி வங்கி ஒரு புதிய வார்த்தையை தன்னுடைய வங்கியின் விற்பனை மேலாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், பெர்ஸனலைஸ்ட் வங்கித் திட்டம். எல்லா பயனர்களும் ஒன்றல்ல, ஒவ்வொரு பயனரும் அல்லது வாடிக்கையாளரும் தனிப்பட்ட தேவைகளை உடையவர். ஆக, அவரவர் தேவைக்கு ஏற்ப வங்கியின் திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும். 'டெய்லர்-மெய்ட்' என்றும் இதை அழைக்கிறார்கள். ஒவ்வொருவரின் உடலமைப்பிற்கு ஏற்ப ஆடைகள் உருவாக்கப்படுவதுபோல, ஒவ்வொருவரின் தேவையைக் கருதி இத்திட்டம் செயல்படும்.
கற்றல் மற்றும் கற்பித்தலிலும் இன்று அதிகமாகப் பேசப்படுகிறது.
கற்றலில் இன்று நாம் சில எதார்த்தங்களை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்:
அ. எல்லா மாணவர்களும் மாணவியர்களும் ஒன்றல்ல.
ஆ. எல்லாருடைய கற்கும் திறன்களும் ஒன்றல்ல.
இ. எல்லாருடைய கற்கும் தேவைகளும் ஒன்றல்ல.
அப்படியிருக்க, படிப்பு அல்லது பாடத்திட்டம் மட்டும் ஒன்று என நான் எப்படிக் கொள்ள முடியும்?
ஆக, ஒவ்வொரு மாணவரின் தேவைக்கேற்ப கற்பித்தல் நடைபெற வேண்டும்.
அப்படி என்றால், வகுப்பில் 40 மாணவர்கள் இருப்பார்கள். 40 தடவை அல்லது 40 வழிகளில் கற்றுக்கொடுக்க முடியுமா? என்று நாம் கேட்கலாம். அப்படிக் கற்றுக்கொடுப்பது கடினம்தான். ஒவ்வொருவரும் தனிநபர் என்றால் தேர்வு எப்படி நடத்துவது? மாணவர்களை எப்படித் தரம் பார்ப்பது? நிறைய செய்முறைப் பிரச்சினைகள் இதில் இருக்கவே செய்கின்றன. ஆனால், ஒட்டுமொத்த அமைப்பிலேயே மாற்றம் வருதல் அவசியம்.
உரோமையில் நான் பயின்றபோது, என்னுடன் என் பங்கைச் சார்ந்த இளவல் ஒருவனும் உடன் வருவான். அவனுக்கு வயது 9 இருக்கும். அங்கே ஸ்கூல் யூனிஃபார்ம் எல்லாம் கிடையாது. ஆனால், இவன் தினமும் விளையாட்டுக்குரிய ஆடையிலேயே வருவான். 'நீ என்ன படிக்கிற?' என்று ஒருநாள் அவனிடம் கேட்டேன். 'நான் ஸ்கூலுக்கு போறதில்லை. கால்பந்தாட்டப் பள்ளிக்குச் செல்கிறேன். இது எனக்கு மூன்றாவது ஆண்டு' என்றான். ஆக, அவன் தன்னுடைய 6ஆவது வயதிலேயே தன் எதிர்கால இலக்கை நிர்ணயித்துக்கொள்கிறான். அதற்காக பயிற்சி செய்கிறான். பொதுத்தேர்வு, இறுதித்தேர்வு என எந்த தொந்தரவும் அவனுக்கு இல்லை. இதுதான் தனிப்பயனாக்கப்பட்ட கல்வி.
இந்த வகைக் கற்றலில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் துறையில் சிறப்புற முடியும். 'கற்றல் குறைவு' என்று யாரையும் இக்கல்விமுறையில் முத்திரை குத்த முடியாது. அந்தத் துறை விருப்பம் உள்ள மாணவர்களே அந்தத் துறையில் இருப்பதால் ஆசிரியரின் கற்றுக் கொடுத்தல் எளிதாகும்.
இதை எப்படி ஊக்குவிப்பது?
அ. பெற்றோர்கள் உதவியுடன் ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களின் தனிப்பட்ட திறமைகள் மற்றும் துறைஆர்வங்களை ஆய்ந்தறிய வேண்டும்.
ஆ. துறை அல்லது ஆர்வத்தின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்துக்கொள்ள வேண்டும்.
இ. கற்றலோடு சேர்த்து தங்களின் துறைசார் அனுபவங்களையும் பெற மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.
ஈ. மாணவர்கள் தங்கள் கற்றலை வளர்த்துக்கொள்ளத் தேவையான வாய்ப்புக்களை உருவாக்கித் தருதல் வேண்டும்.
உ. வகுப்பறையில் நெகிழ்வுத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
ஊ. மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை மற்றும் திறனை மையப்படுத்தி கற்பித்தலின் வேகத்தை வரையறுக்க வேண்டும்.