Saturday, May 30, 2020

யானையைச் சாப்பிடுவது

நேர மேலாண்மை மற்றும் இலக்கு மேலாண்மையில் பேசப்படக்கூடிய இன்னொரு தலைப்பு யானையைச் சாப்பிடுவது.

தென்னாப்பிரிக்க நாட்டின் கேப் டவுன் மறைமாவட்டத்தில் உரோமன் கத்தோலிக்க பேராயர் மேதகு டெஸ்மன்ட் அவர்கள், 'யானையை சாப்பிட வேண்டுமென்றால், ஒவ்வொரு வாயாகச் சாப்பிட வேண்டும்' என்று வேடிக்கையாகச் சொன்னர்.

யானையை நாம் சாப்பிட முடியுமா?

ஒரு ஆட்டை நம்மால் சாப்பிட முடியுமா?

ஒரு கோழியை?

ஒரு நாளில் ஒரு கிலோ உள்ள கோழியை நாம் சாப்பிட முடிந்தால், ஆயிரம் கிலோ உள்ள ஒரு யானையைச் சாப்பிட ஆயிரம் நாள்கள் ஆகும். ஆக, பெரிய யானையை சிறிய சிறியதாக வெட்டிவிட்டால் நாம் எளிதாகச் சாப்பிட்டுவிடலாம்.

இந்த வாரம் ஒரு பாடம் எடுக்க வேண்டும் என வைத்துக்கொள்வோம்.

அந்தப் பாடத்தில் ஐந்து பக்கங்கள் இருக்கின்றன. ஐந்து பக்கங்கள் என்பது யானை போன்றது. ஆனால், அதை ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பக்கம் என ஒதுக்கி விட்டால் நாம் மிக எளிதாக ஐந்து பாடங்களை எடுத்துவிடலாம். ஒருவேளை, அன்றைய பக்கங்களை அன்றைய நாளில் முடிக்காமல் இருந்தால் என்ன ஆகும்? அது ஐந்தாம் நாளில் பெரிய யானையாக மாறிவிடும். சாப்பிடுவது கடினமாகிவிடும்.

ஆக, எந்த ஒரு வேலை அல்லது இலக்கு என்றாலும், அதை சிறிது சிறிதாக வெட்டிவிட வேண்டும்.

எடுத்துக்காட்டாக, பள்ளி ஆண்டு விழா கொண்டாடுதல் - இது ஒரு யானை போன்றது.

இந்த யானையை எப்படிச் சாப்பிடுவது?

முதலில், இதை ஒட்டிய எல்லா வேலைகளையும் பட்டியிலிட வேண்டும். பட்டியலில் உள்ள ஒவ்வொரு வேலைக்கும் ஒரு நாளையும் ஒரு நபரையும் குறிக்க வேண்டும். இப்படிப் பிரித்து நிற்பதோடு, அன்றன்றைக்கு உள்ளதை அன்றன்றைக்கு, அந்தந்த நபர் செய்து முடித்தால் வேலை எளிதாக முடிந்துவிடும்.

இதை நாம் அறியாமலேயே நம் வீடுகளில் செய்கிறோம்.

எப்படி?

ஒரு வீட்டை நிர்வகிப்பது என்பது யானையைச் சாப்பிடுவது போன்றது.

ஆனால், அம்மா சில வேலைகளை, அப்பா சில வேலைகளை, பிள்ளைகள் சில வேளைகளை எனப் பிரித்துக்கொண்டால், யானையை ஒரே நாளில் ஒரு விருந்து போலச் சாப்பிட்டு விடலாம்.

ஆக, யானை என்பது நம் இலக்கு அல்லது செயல்.

அதை எப்படிச் சாப்பிடுவது?

ஒன்று, சிறு சிறு துண்டுகளாக வெட்டி சாப்பிடுவது.

இரண்டு, ஒட்டுமொத்த கிராமமும் இணைந்து ஒரே நாளில் சாப்பிட்டு முடிப்பது.