'ஸ்சீ தலைமுறை' ('Generation Z') என்னும் இன்றைய மற்றும் நாளைய மாணவர்களுக்கு கற்பித்தல் அல்லது அம்மாணவர்களோடு கற்றல் எவ்வாறு?
கல்வி மாறிக்கொண்டே இருக்கிறது. ஆக, கற்பித்தலும் கற்றலும் மாறிக்கொண்டே இருக்கின்றன. பாரம்பரியமாக இருப்பதை மாற்றுவதே முதல் வழி. சாக்பீஸ் மற்றும் கரும்பலகையை மறந்துவிடுங்கள். நீங்களே பேசிக்கொண்டு மாணவர்களை மௌனமாக வைத்திருக்காதீர்கள்.
நீங்கள் மறக்கக் கூடாத ஒன்று: உங்களுடைய ஆர்வம்! ஆசிரியப் படிப்புக்காக சேர்ந்த அந்த நாளில் ஆர்வம் இறுதிவரை இருக்க வேண்டும்.
இத்தகைய ஆர்வம் கொண்ட ஆசிரியரின் 7 திறன்களை இன்று சிந்திப்போம்.
1. இடீச்சர் (eTeacher)
கல்வியின் எதிர்காலம் தொழில்நுட்பத்தோடு இணைந்தது. தொழில்நுட்பம் இல்லாமல், எண்ணியல் இல்லாமல் இவ்வுலகில் ஒன்றுமில்லை. வகுப்பறையையும் தாண்டிவிட்டது கல்வி. தொழில்நுட்பத்தை மறந்தால் நீங்கள் சீக்கிரம் மறக்கப்படுவீர்கள். ஆக, தொழில்நுட்பத்தை உங்கள் நண்பனாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கென்று ஒரு வலைப்பக்கம், முகநூல் பக்கம், இன்ஸ்டாக்ராம், ஸ்னாப்சாட் என உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் யார் என்பதையும், உங்கள் எண்ணங்கள் என்ன என்பதையும் மாணவர்கள் உங்கள் பக்கங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும்.
2. காகிதங்கள் வேண்டாம் (Go Paperless)
இன்று காகிதங்கள் இல்லாத அலுவலகங்கள் வேகமாக வளர்கின்றன. வங்கிகள் காகிதமற்ற பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கின்றன. காகிதக் கோப்புகள் சேகரித்து வைக்க முடியாததை இன்று க்ளவுட் மெமரி சேமித்து வைக்க முடியும். காகிதத்தில் சேமித்து வைத்ததை நாம் தேட முடியாததை, இப்போது வெறும், 'கன்ட்ரோல்-ப்ளஸ்-எஃப்' என உள்ளிட்டுத் தேடிவிட முடியும்.
3. நான் வளர்கிறேன் மம்மி! (Formative)
மாணவர்களின் வளர்ச்சியை அவர்களின் க்ரேட்களைக் கொண்டு மட்டும் கணக்கிட வேண்டாம். அவர்கள் உள்ளம் உருவாகிறதா என்று கவனியுங்கள். அதுவே அவசியம்!
4. நானும் மாணவரே! (Be a Lifetime Student)
ஒவ்வொரு ஆசிரியரும் தானும் ஒரு மாணவர் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். மாணவர்கள் நம்மிடமிருந்து கற்றுக்கொள்வதுபோல, நாமும் மாணவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. கூச்சப்படாமல் அவர்களிடம் கேட்கலாம். அல்லது அவர்களைப் போல நாமும் வௌ;வேறு ஊடகங்கள் வழியாகக் கற்கலாம்.
5. கவனம் (Suspicion)
எண்ணியல் ஊடகத்தைப் பயன்படுத்துவதில் இன்னும் அதிகக் கவனம் தேவை. நாம் பேசுவதும் எழுதுவதும் ஒரு நொடிக்குள் காப்பி செய்யப்பட்டு உலகெங்கும் சில நொடிகளில் பரவிவிட முடியும். மேலும், பாதுகாப்பற்ற, தனிநபர் உரிமை மீறல்கள் நடைபெறுகின்ற இடமும் செயலிகளே. எனவே, இவற்றை நாம் கவனமுடன் கையாளுவதோடு, இந்த ஊடகத்தின் நொறுங்குநிலையையும், உறுதியற்ற தன்மையையும் நாம் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
6. கூட்டாற்றல் (Synergy)
ஒன்றும் ஒன்றும் மூன்று என்று சொல்லும் கூட்டாற்றல் அதிகமாகப் பேசப்படும் காலம் இது. ஆக, எனக்கு அடுத்திருக்கும் பள்ளியில் உள்ள ஆசிரியரிடமிருந்து அல்லது என் பள்ளியில் என் உடன் ஆசிரியரிடமிருந்து நான் கற்றுக்கொள்ள முடியும். இதற்குத் தேவை தாராள உள்ளமும் பரந்த மனமும். கொடுக்கல் வாங்கல் பணத்தில் அல்ல, அறிவில் இருக்க வேண்டும். அறிவு மட்டுமே கொடுத்தாலும் குறைவதில்லை.
7. ஊடாடும் கல்விமுறை (Interactive Learning)
மாணவர்களின் கவனமும், கூர்நோக்கும் திறனும் வேகமாகக் குறைந்து வரும் இக்காலத்தில் நாம் மாற்று கற்பித்தல் முறைகளை, குறிப்பாக, ஊடாடும் கற்பித்தல் முறையை, பிரம்மாஸ்திரம் போலக் கையில் எடுப்பது அவசியம்.