Wednesday, May 27, 2020

எக்ஸிட் டிக்கெட்

இன்று நாம் கற்கும் முறைமையின் பெயர் 'எக்ஸிட் டிக்கெட்' (Exit Ticket) அல்லது 'எக்ஸிட் ஸ்லிப்' (Exit Slip). தமிழில், 'புறப்பாட்டுச் சீட்டு' என்று ஓரளவிற்கு மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.

நாம் பாடம் நடத்திவிட்டோம். நாம் நடத்தியது மாணவர்களுப் புரிந்ததா என்பதையும், எவ்வளவு புரிந்தது என்பதையும், அவர்களின் சந்தேகம் என்ன என்பதையும் மிக எளிதாக அறிந்துகொள்ளும் வழிதான் 'எக்ஸிட் ஸ்லிப்.'

ஆசிரியர் மாணவர்களிடம் வகுப்பின் இறுதியில் கேட்கும் கேள்விக்கு மாணவர்கள் ஒரு சிறிய தாளில் அல்லது அட்டையில் அதற்குரிய விடையை எழுத வேண்டும். மாணவர்கள் தாங்கள் கற்றதை நினைவுகூர்வதற்கும், கற்றதைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதற்கும், தாங்கள் பெற்ற தகவல்களை கூர்மைப்படுத்துவதற்கும் இப்பயிற்சி பயன்படும். 

மூன்று வகையான எக்ஸிட் டிக்கெட்டுகள் உள்ளன:

அ. கற்றதை எழுதத் தூண்டும் சீட்டு

எ.கா.: நீ இன்று கற்ற ஒன்றை எழுது.
எ.கா.: இன்று கற்ற பாடம் நம் வாழ்வியல் எதார்த்தத்திற்குப் பொருந்துகிறதா? விடையளி.

ஆ. கற்றல் நிகழ்வு பற்றிய சீட்டு.

எ.கா.: இன்று நடத்திய பாடத்தில் எனக்குப் புரியாதது ...
எ.கா.: இன்றைய பாடத்தை ஒட்டிய ஒரு கேள்வியைப் பதிவு செய்.

இ. கற்பித்தலின் தாக்கத்தை உணர்ந்துகொள்வது பற்றிய சீட்டு.

எ.கா.: சிறிய குழுக்களில் விவாதித்தது உங்களுக்குப் பிடித்ததா?
எ.கா.: இன்றைய வகுப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?

இதையொட்டி, பின்வருமாறு கேள்விகளையும் தரலாம்:
  • நான் இன்னும் கற்க விரும்புவது ...
  • நான் கற்றதில் மிக முக்கியமானது ...
  • எனக்கு இன்று அதிக வியப்பு தந்தது ...
  • இந்தப் பாடத்தை வேறு எப்படிக் கற்கலாம்? ...

பயன்கள்
  • மாணவர்கள் தாங்கள் கற்றதை நினைவுகூர உதவுகிறது.
  • மிகச் சில நொடிகளில் ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் பற்றிய திறனாய்வைப் பெற முடியும்
  • மாணவர்களின் புதிய கேள்விகளைத் தெரிந்து கொண்டு ஆசிரியர் அதற்கேற்ப பாடம் நடத்தலாம்
எப்படி நடத்துவது?

எடுத்துக்காட்டாக, 

ஆறாம் வகுப்பு சமூக அறிவியில் பாடத்தில், முதல் பருவம் பாடநூலில், அலகு 4 எடுத்துக்கொள்வோம். 'தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்' என்னும் இந்த அலகை வகுப்பில் கற்றுக்கொடுத்தாயிற்று.
  • வகுப்பு முடிவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் மாணவர்களுக்குச் சிறிய காகிதத் துண்டை வழங்க வேண்டும்.
  • 'உன்னைக் கவர்ந்த பண்டைய நகரம் எது? ஏன்?' - இப்படி ஒரு கேள்வியைக் கொடுக்க வேண்டும்.
  • இக்கேள்வியை வாய்மொழியாகச் சொல்லலாம். அல்லது கரும்பலகையில் எஐதலாம்.
  • உடனடியாக மாணவர்கள் விடையை எழுத ஆரம்பிக்க வேண்டும். புத்தகத்தைப் பார்க்கவோ, அடுத்தவருடன் விவாதிக்கவோ கூடாது.
  • ஒவ்வொரு மாணவரும் வெளியேறும்போது சீட்டை ஆசிரியரிடம் கொடுப்பார்.
  • மாணவர்கள் எழுதியிருப்பதை வைத்து ஆசிரியர் தன்னையும் தன் கற்பித்தலையும் திறனாய்வு செய்துகொள்ளலாம்.
  • இதை மொத்தமாக சேகரித்து வைத்து மாணவர்களுக்கு மதிப்பெண்களும் வழங்கலாம்.

நாம் என்னதான் நன்றாகக் கற்றுத்கொடுத்தாலும், சில நேரங்களில் மாணவர்கள், 'அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்' என்ற அளவில் எழுதியிருப்பார்கள். அதைப் பொருட்படுத்தக் கூடாது.

எக்ஸிட் ஸ்லிப்பின் வடிவத்தை தரவிறக்கம் செய்ய இங்கே க்ளிக்கவும்: