
இந்த புதிய வலைப்பூ (blog) வழியாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன்.
'இனி கற்றல் சுகமே!' என்ற பதாகையுடன் (banner) வலம் வரும் இந்த வலைப்பூவை அனைத்து பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு அர்ப்பணிக்கிறேன். என் மாணவப் பருவத்தில் நான் என் ஆசிரியர்களிடம் கற்றவற்றையும், பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று நான் ஆசிரியர்களுக்குப் பயிற்றுவித்த கருத்தமர்வுகளையும், நான் இப்போது ஆசிரியராக இருந்து கற்றுக்கொள்ளும் அனைத்தையும் என் சக ஆசிரியர்களுக்குப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
ஆசிரியர் பணி.
இந்தப் பணியில் நான் மிகவும் சிறப்பாகக் கருதுவது என்ன தெரியுமா?
இந்தப் பணியில் மட்டும்தான், எனக்கு வயது ஆனாலும், என்னால் பயன்பெறுகிறவர்களுக்கு வயதே ஆகாது. அல்லது, இந்தப் பணியில் மட்டும்தான் நான் பழகும் நபருக்கு ஒரே வயது இருக்கும்.
எப்படி?
இன்று எனக்கு வயது 40. நான் பள்ளியில் முதல் வகுப்பு எடுக்கிறேன். அதில் உள்ள குழந்தைகளின் வயது சராசரியாக 5. எனக்கு 50 வயது ஆனாலும் என் முதல் வகுப்பின் குழந்தைகளுக்கு வயது 5 ஆகத்தான் இருக்கும். ஆக, என் மனம் என்றும் இளமையாக இருக்கும் அக்குழந்தைகளால்.
தண்ணீரின் மூலக்கூறு வாய்ப்பாடு H2O என்றால், ஆசிரியரின் மூலக்கூறு வாய்ப்பாடு H3O:
H - Head (தலை) - ஆசிரியர் தன் பாடத்திலும் மற்றவற்றிலும் பெற்றிருக்கும் அறிவு (knowledge)
H - Heart(இதயம்) - ஆசிரியர் தன் உணர்வுகளையும், தன் மாணவர்களின் உணர்வுகளையும் பற்றிக் கொண்டிருக்கும் புரிதல் (empathy)
H - Hands (கைகள்) - ஆசிரியர் கொண்டிருக்கும் திறன்கள் (skills)
இவை மூன்றும் இணைந்தால் 'O' (Optimum).
இந்த மூன்றையும் இணைப்பதற்கு மூன்று ஃபார்முலா.
அ. பணிசார் வாழ்விற்கு (professional life): 80-20 Principle. இதை ஆங்கிலத்தில் பரோட்டோ கொள்கை என்பர். இதை உருவாக்கியவர் இத்தாலிய பொருளாதார நிபுணர் பரேட்டோ. நம்ம ஃபோன்ல 100 தொடர்பு எண்கள் இருக்கின்றன என வைத்துக்கொள்வோம். இவற்றில் வெறும் 20 எண்களை நாம் 80 சதவிகதம் தொடர்பு கொள்வோம். மற்ற 80 எண்களை வெறும் 20 சதவிகிதம்தான் தொடர்பு கொள்வோம். ஆக, அந்த 20 எண்களின் தொடர்பை நாம் மேன்மைப்படுத்தினாலே 80 சதவிகித மேன்மையை அடைந்துவிட முடியும். ஆக, வகுப்பில் மிகக் குறைந்த, ஆனால் முக்கியமானவற்றைப் பயன்படுத்தி, அது 20 சதவிகிதமாக இருந்தாலும், 80 சதவிகித மேன்மையை நான் அடைய வேண்டும்.
ஆ. தனிநபர் வாழ்விற்கு (personal life): 90-10 Principle. இதை வகுத்தவர் கோவே. நம்ம வாழ்க்கையில் நடக்கும் 90 சதவிகத விடயங்கள் நம் கையை மீறுபவை. அவற்றை நம் கட்டுக்குள் நாம் வைக்க முடியாது. வெறும் 10 சதவிகிதம்தான் நம் கைக்குள் அடங்குபவை. கட்டுக்குள் வைக்க இயலாதவற்றைப் பொருட்படுத்தாமல், கட்டுக்குள் அடங்குவதன்மேல் கவனம் செலுத்துவது. வகுப்பறைக்கு வருகிறோம். வந்தவுடன் மின்சாரம் போய்விடுகிறது. நம்மால் கணிணி அல்லது ஒளி வீச்சி பயன்படுத்த முடிவதில்லை. மாணவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பத்து பேர் வரவில்லை. சிலர் புத்தகம் கொண்டுவரவில்லை. பக்கத்து கல்யாண மண்டபத்தில் பாடல் போட்டிருக்கிறார்கள். எங்கும் சப்தமாக இருக்கிறது. இவை எதையும் நாம் கட்டுக்குள் வைக்க முடியாது. ஆனால், என் பாடத்தை, நான் நடத்தும் விதத்தை கட்டுக்குள் வைக்க முடியும். ஆக, கட்டுக்குள் வைக்க இயலாதவற்றை விடுத்து, என் கட்டுக்குள் உள்ளதன்மேல் நான் கவனம் செலுத்த வேண்டும்.
இ. உறவுசார் வாழ்விற்கு (relational life): 4-1 Principle. என் மாணவர்களை நான் திருத்தும்போது, அவர்களைக் கண்டிக்கும்போது, அவர்களின் 1 குறையைக் காட்டுவதற்கு முன், அவர்களிடமிருக்கும் 4 நிறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும். மாணவி ஒருத்தி தாமதமாக வருகிறாள் என வைத்துக்கொள்வோம். 'ஏன் லேட்டு? வெளியே போ!' என்று கண்டிப்பதற்கு முன் நான் என்ன செய்ய வேண்டும்? 'வாமா!' வாழ்த்துக்கள். பரவாயில்லையே தாமதமானாலும் பள்ளிக்கு வந்துவிட்டாயே! சீருடை சுத்தமாக இருக்கிறதே! நன்றாக தலை சீவியிருக்கிறாயே! அழகாக சிரிக்கிறாயே! என்று சொல்லிவிட்டு, 'ஆனா! கொஞ்சம் சீக்கிரமா வந்துடுமா!' என்று சொன்னால் அவள் இனி தாமதமாகவே வர மாட்டாள். இப்படிச் செய்வதால் நம்முடைய நேர்முகப் பார்வையும் கூடும்.
இந்த ஃபார்முலா தெளிவானால், என் ஆசிரியப் பணியை நான் முழுமையாகச் செய்ய முடியும்.