முதலாவதாக, நாம் பார்க்கும் முறை அல்லது முறைமை 'யோசி-இணை-பகிர்.' ஆங்கிலத்தில், இதை 'THINK-PAIR-SHARE' என்றும், சுருக்கமாக, டி-பி-எஸ் (TPS) என்றும் அழைப்பார்கள்.
இங்கே, கற்றல் மூன்று நிலைகளில் நடைபெறும். 'யோசித்தல்' என்பது தனிநபர் நிலையிலும், 'இணைதல்' என்பது ஒரு மாணவர் இன்னொரு மாணவரோடு என்ற நிலையிலும், 'பகிர்தல்' என்பது மாணவர் ஒட்டுமொத்த வகுப்போடு என்ற நிலையிலும் நடைபெறும். மேலும், தனிநபர்-அடுத்தவர்-மற்ற எல்லாரும் என்ற முப்பரிமாண நிலையில் மாணவர் தன்னையே ஒரு தாமரை மலர் போல விரித்துக்கொடுப்பார். மேலும், இங்கே மாணவர் தானே சொந்தமாக யோசிக்கவும், அடுத்தவரோடு அதைப் பகிரவும், மற்ற எல்லார் முன்னிலையிலும் பகிரும்போது தன்னம்பிக்கையும் பெறுவார்.
மேலும், இந்த முறையில் மாணவர்கள் விழிப்புநிலையில் இருப்பர், ஒருவர் மற்றவரோடு மனம் திறப்பர், தாங்கள் கற்றதையும் கேட்டதையும் நினைவில் கொள்வர்.இந்த நிலையில் மாணவர்களின் சிந்திக்கும் திறன், கோர்வையாகச் சிந்திக்கும் திறன், அறிவார்ந்த காரணங்களைக் கண்டறியும் திறன், சரியான வார்த்தைகளில் வெளிப்படுத்தம் திறன் ஆகியவற்றை வளர்க்க ஆசிரியர் உதவி செய்வார். இந்த வகையில், மாணவர்கள் தாங்களாகவே பாடப் புத்தகத்தை வாசித்து அதன் பொருளை உணர்ந்து கொள்வது என்பதைக் கற்றுக்கொள்வர்.
இதை எப்படிச் செயலாற்றுவது?
ஒன்று, ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் ஒரு கேள்வியைத் தர வேண்டும். ஒரு நிமிடம் முதல் இரண்டு நிமிடங்கள் வரை ஒவ்வொரு மாணவரும் தனியாகச் சிந்திக்க வேண்டும். பாடப்புத்தகம், நோட்டு, பென்சில் பயன்படுத்தி குறிப்புகள் எடுக்க வேண்டும்.
இரண்டு, மாணவர்களை இரண்டு இரண்டு நபர்களாகப் பிரித்துவிட வேண்டும்.
மூன்று, முதலில் ஒவ்வொரு மாணவரும் அக்கேள்விக்கான விடையைக் கண்டறிவார். பின் அதை தன் இணையரோடு பகிர்ந்துகொள்வார். மாணவர்கள் தாங்கள் தனியாக எடுத்த குறிப்புக்களைக் கொண்டு இணையரோடு உரையாடுவார். ஒரே கருத்து அல்லது எதிர்கருத்து எழலாம். எக்கருத்து எழுந்தாலும் அதற்கான காரணத்தை அவர்கள் சொல்ல வேண்டும். இருவரும் சேர்ந்து ஒரே விடைக்கு தங்களை ஒருமுகப்படுத்துவர்.
நான்கு, சில நிமிடங்கள் கழித்து, மீண்டும் எல்லாரும் கூட்டப்பட்டவுன் ஒவ்வொரு குழுவும் தாங்கள் கண்டறிந்த விடையை பொதுவான வகுப்பில் அனைவரோடும் பகிர்ந்துகொள்வர். மாணவர்கள் பகிர்வதை கரும்பலகையில் யாராவது ஒருவர் எழுதி அட்டவணைப்படுத்தலாம். ஒரே கருத்து அல்லது எதிர் கருத்து என்றும் அட்டவணைப்படுத்தலாம். நேரம் குறைவாக இருந்தால், ஒரு குழு பகிர்ந்தவுடன் மற்ற குழுவினர் அதே கருத்தைக் கொண்டிருந்தால் கைகளை உயர்த்தச் சொல்லலாம். புதிய கருத்துக்களை மட்டும் பகிருமாறு சொல்லலாம்.
எடுத்துக்காட்டாக,
ஆறாம் வகுப்பு சமூக அறிவியில் பாடத்தில், முதல் பருவம் பாடநூலில், அலகு 4 எடுத்துக்கொள்வோம்.
'தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்' - இதுதான் அலகின் தலைப்பு.
கொடுக்கப்பட வேண்டிய கேள்வி: 'தமிழகத்தில் நகரங்கள் உருவானது எங்கு? ஏன்? எப்படி?'
இந்தக் கேள்வியின் பின்புலத்தில் மாணவர்கள் பாடப்புத்தகத்தின் இந்த அலகை தாங்களாகவே படிக்க வேண்டும். பின், தங்கள் இணையரோடு பகிர்தல் வேண்டும். பின் ஒட்டுமொத்த வகுப்போடு பகிர வேண்டும். இறுதியில், ஆசிரியர் பெட்டிச் செய்திகளின் பின்புலத்தில் பாடத்தின் சுருக்கத்தை மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும்.
இந்த முறையில் ஒவ்வொரு மாணவரும் பின்பற்ற வேண்டிய மாதிரியை கீழே உள்ள லிங்க்கில் தரவிரறக்கம் செய்துகொள்ளலாம்:
